ஒரு தலை ராகத்தை இதுவரை டி.ஆர் பார்த்ததேயில்லையாம் அதுக்கு பின்னால் இருக்கும் செண்டிமெண்ட் காரணம் என்ன? சினிமாவில் சகலகலா வல்லவனான டி.ராஜேந்தர் ஏன் எடிட்டிங் செய்ய மறுத்தார்? நம்ம மேல டி.ஆருக்கு ஒரு வருத்தம் இருக்குதாம். அது என்ன? நமக்கெல்லாம் டி.ஆரை ஏன் பிடிச்சிருக்கு. அதுக்கான 3 காரணங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

தன்னம்பிக்கை
1980 வது வருசம் முரட்டுக்காளை படம் ரிலீஸாகி தியேட்டரே தெறிச்சுட்டு இருக்கு. இந்தப் பக்கம் கமலுக்கு குரு படம் ரிலீஸாகி ஓடிட்டு இருக்கு. இதுக்கு நடுவுல ஒரு படம் ரிலீஸ் ஆகுது. படத்துல எல்லாருமே புதுமுகங்கள், டைரக்டர் புதுசு. அந்த வருசம் ரிலீஸான படங்கள்ல 30 படங்களுக்கு மேல இளையராஜாதான் இசை. இந்தப் படத்துல அதுவும் இல்ல. இப்படி ஒண்ணுமே இல்லாத ஜீரோவா ரிலீஸான அந்தப் படம் அன்னைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில சக்கை ஹிட் அடிக்குது. திரும்ப திரும்ப வந்து படம் பார்க்குறாங்க. பாடல்களைக் கொண்டாடுறாங்க. யாருய்யா இந்த டைரக்டரு, யாருயா மியூஸிக் பண்ணதுனு எல்லாரும் தேடுறாங்க. இது ரெண்டையும் பண்ணது ஒரே ஆளு விஜய தேசிங்கு ராஜேந்திர சோழன் நமக்கெல்லாம் தெரிஞ்ச டி.ஆர். அவ்வளவு மாஸா தமிழ் சினிமாக்குள்ள அறிமுகம் ஆகுறார் டி.ஆர் ஆனா சோகம் என்னன்னா அவரது முதல் படமான ஒரு தலை ராகத்தில் இயக்குநர் என்று வேறு ஒருவரின் பெயர் வருகிறது. இசையிலும் இவருக்குப் பக்கத்தில் இன்னொரு பெயர். வெறுத்துப் போன டி.ஆர் இனி இந்தப் படத்தைப் பார்க்கவே வேண்டாம் என்று முடிவெடுத்தார். இரண்டாவது படம் வசந்த அழைப்புகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அடுத்த படமான ரயில் பயணங்களில் படத்தில் தான் யார் என்பதை நிரூபித்தார். அன்றைக்கு இருந்து இன்றைக்கு வரைக்கும் தன்னோட தன்னம்பிக்கையால கால் வச்ச ஒவ்வொரு இடத்துலயும் கலக்கியிருக்காரு டி.ஆர். இன்னைக்கு வரைக்கும் அவர் திரையில வந்தாலோ, மேடையேறினாலோ நமக்கு ஜாலிலோ ஜிம்கானாதான்.

கிரியேட்டிவிட்டி
டி.ராஜேந்தர் என்றாலே நமக்கு அடுக்கு மொழி வசனம்தான் நினைவுக்கு வரும். இன்ஸ்டண்ட்டாக ரைமிங் வார்த்தைகள் பிடித்து அடிப்பதே ஒரு மிகப்பெரிய திறமை. ஆனால் அதைத்தாண்டியும் நிறைய நல்ல பாடல்வரிகளையும் வசனங்களையும் கொடுத்தவர் டி.ஆர். சிறந்த உதாரணம் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது பாடல் வரிகளைக் கவியரசு கண்ணதாசனே வியந்து பாராட்டினார். இது குழந்தை பாடும் தாலாட்டு பாடல் மொத்தமும் முரண்களாகவே எழுதியிருப்பார். இதுபோல நிறைய பாடல் வரிகளை உதாரணமாகச் சொல்லலாம். வசனத்திலும் கிரியேட்டிவிட்டியில் வீடு கட்டி விளையாடுபவர் டி.ஆர். ‘மரம் வெயில்ல காஞ்சாதான், கீழ இருக்கவங்களுக்கு நிழல் கிடைக்கும். குடை மழைல நனைஞ்சாதான் அதைப் பிடிச்சிட்டுப் போற ஆள் நனையாம போக முடியும். அதைப் போல உனக்காக நான் கஷ்டப்படறதில் எனக்கு ஒரு சந்தோஷம்’ எப்படி டி.ஆர். கிரியேட்டிவிட்டி!

பன்முகத்தன்மை
அவரே நடிப்பார், இயக்குவார், தயாரிப்பார், இசையமைப்பார், எழுதுவார். சகலகலாவல்லவன் என்ற பட்டம் டி.ஆருக்குத்தான். சினிமாவில் எல்லாத் துறைகளிலும் கால் பதித்த டி.ஆர் இதுவரை எடிட்டிங் பக்கம் மட்டும் போனதேயில்லை. அதை செய்யாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. “அட அது ஒரே இடத்துல உக்காந்து வேலை பாக்கணும்ங்க. அது நமக்கு செட் ஆகாது. நான் மியூசிக் போடும்போதுகூட நடந்துக்கிட்டேதான் போடுவேன்” என்கிறார் மிஸ்டர். மல்டிடேலண்ட். டி.ராஜேந்தருக்கு ஒரு வருத்தம் இருந்தது. வாசமில்லா மலரிது எழுதிய என்னைப் பார்த்து வாடா என் மச்சிக்காக சிரிக்குறாங்க. லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்டனக்கானு புரட்சியா பாடினா வெறும் டண்டனக்கா மட்டும் எடுத்து ட்ரோல் பண்றாங்களேனு. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இவரிடம் கீபோர்டு வாசித்தவர் என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

பல துறைகளில் இவருக்கு இருந்த அறிவுதான் இவரை எல்லாருக்கும் பிடிக்க வைத்தது. அதைப் பற்றி கேட்டால் தன் ஸ்டைலில் இப்படிச் சொல்கிறார்.
“தடை என்பது சுவர்.. Knowlege is power”
Also Read: மம்முட்டி நடிப்பில் ஏன் மாஸ்டர்… 4 ‘நச்’ காரணங்கள்!