இந்தியாவின் நம்பர் ஒன் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்ஸ் வரிசையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பெருமை பெற்றது ஐஐடி மெட்ராஸ். நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் முக்கியமாகக் கருதப்படும் ஐஐடி மெட்ராஸுக்கும் ஜெர்மனிக்கும் இருக்க முக்கியமான கனெக்ஷன் தெரியுமா… அதன் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா!
சுதந்திரத்துக்குப் பிறகாக தொழில்வளர்ச்சி சூழலில் இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு என நான்கு பகுதிகளிலும் அமெரிக்காவின் புகழ்பெற்ற மசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தைப் போல உயர் கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்று பரிந்துரை செய்தது, பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைத்த நளினி ரஞ்சன் சர்க்கார் கமிட்டி. விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் முதல் ஐஐடி காரக்பூரில் 1951-லும், இரண்டாவது ஐஐடி மும்பையில் 1958-லும் அமைக்கப்பட்டன. மூன்றாவது உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட அப்போது உலக நாடுகளிடையே நிலவிக் கொண்டிருந்த பனிப்போர் முக்கியமான காரணம் என்றே சொல்லலாம். வளர்ந்த நாடுகள் பலவும் வளரும் நாடுகளுக்குப் பல்வேறுரீதியாக உதவி செய்து, தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்துகொண்டிருந்த நேரம் அது.
இப்போதைய ஜெர்மனி, அந்த காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனி என பிரிந்துகிடந்தது. மேற்கு ஜெர்மனி, இந்தியாவை நட்பு நாடாகக் கருதி உதவ முன்வந்தது. இந்த சூழ்நிலையில் 1956 ஜூலையில் மேற்கு ஜெர்மனிக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அந்நாட்டின் ஜனாதிபதி Theodor Heuss மற்றும் அதிபர் Konrad Adenauer இடையே நடந்த பேச்சுவார்த்தை நடந்தது. தொழில்நுட்பக் கல்வியில் முன்னணியில் இருந்த மேற்கு ஜெர்மனி அரசின் உதவியோடு இந்தியாவில் உயர் தொழில்நுட்பப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றை நிறுவ இருப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்தியா – ஜெர்மனி இடையில் கையெழுத்தான முதல் ஒப்பந்தமும் இதுதான்.
ஐஐடி அமைக்க மேற்கு ஜெர்மனி உதவுவதாக அறிவித்துவிட்டாலும், அவங்களோட முதல் சாய்ஸ் அப்போதைய மெட்ராஸ் இல்லையாம். அவங்களோட முதல் சாய்ஸ் என்னனு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
Also Read – சான்ஸே இல்லை… பிரபல நடிகர்களின் பிரமாதமான விளம்பரங்கள்!
ஐஐடி மெட்ராஸ் அமைய முடிவு செய்யப்பட்ட பிறகு அப்போதைய தமிழக அரசு கிண்டி தேசிய பூங்காவை ஒட்டிய பகுதியில் 600 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது. 1958-ல் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இதற்கான திட்டக்குழுவும் அமைக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடங்கப்பட்டன. ஐஐடி மெட்ராஸின் முதல் நிர்வாகக் குழு 1959 ஜனவரியில் கூடியது. அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரான ஏ.எல்.முதலியார் தலைவராக இருந்தார். மாணவர் சேர்க்கை 1959 ஏப்ரலில் தொடங்கப்பட்டு, 120 மாணவர்கள் முதல் பேட்சில் சேர்ந்தனர். அவர்களுக்கான வகுப்புகள் 1959 ஜூலையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர்கள் தங்கியிருந்து மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு, இந்திய பேராசியர்களுக்கு பயிற்சியும் அளித்தனர். இன்றும் ஜெர்மன் அரசு உதவியோடு DAAD programme மற்றும் Humboldt Fellowships ஸ்காலர்ஷிப் புரோகிராம்களும் ஐஐடி மெட்ராஸில் இன்றும் தொடர்கின்றன.
இரு நாடுகள் இடையே மேற்கு ஜெர்மனியின் Bonn நகரில் ஒப்பந்தம் கையெழுத்தானதன் நினைவாக, ஐஐடி மெட்ராஸில் இருக்கும் முக்கியமான இரண்டு சாலைகளுக்கு Bonn Avenue மற்றும் Delhi Avenue என்று பெயர் வைத்தனர். கேம்பஸுக்குள் பயணிக்கும் பேருந்துகளுக்கு மலைகளின் பெயர்களையும், மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு ஆறுகளின் பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. 1959-ல் வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு, அதன் இரண்டாவது பேட்ச் மாணவர்களுக்காக முதன்முதலில் தொடங்கப்பட்ட விடுதிகள் கிருஷ்ணா மற்றும் காவேரி விடுதிகளாகும். விண்வெளி ஆய்வு, எலெக்ட்ரிக் வாகனங்கள், ரோபாடிக்ஸ், 5ஜி தொலைதொடர்பு வசதி உள்ளிட்ட நமது நாட்டின் தொழில்நுட்ப, சமூக வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது நம்ம மெட்ராஸ் ஐஐடி.
ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் ஆண்டுதோறும் சாரங் என்கிற பெயரில் கலை விழாவையும், Shaastra என்கிற பெயரில் தொழில்நுட்ப விழாவையும் நடத்தி வருகிறார்கள். இதில், Shaastra-வுக்கு முக்கியமான பெருமை உள்ளது. உலக அளவில் மாணவர்கள் நடத்தும் விழாக்களிலேயே ஐஎஸ்ஓ 9001:2000 அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் நிகழ்வு சாஸ்த்ராதான். அதேபோல், இங்கு நிறுவப்பட்டிருக்கும் Param Pravega-தான் இந்தியாவின் கல்வி நிலையங்களில் நிறுவப்பட்டிருக்கும் சூப்பர் கம்யூட்டர்களிலேயே அதிவேக திறன் படைத்தது. இரண்டு பள்ளிகள், ஒரு மருத்துவமனை, மூன்று கோயில்கள், ஜிம், கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஸ்டேடியங்கள், ஷாப்பிங் சென்டர்கள்,
மேற்கு ஜெர்மனி ஐஐடி அமைக்க முடிவு செய்தபோது, டெல்லியை ஒட்டி அது அமைய வேண்டும் என்று விரும்பியதாம். அதேநேரம், கான்பூரையும் அவங்க விரும்பவில்லையாம். அது ரொம்பவே ஐசலோட்டடான இடமா இருக்குனு அவங்க நினைச்சிருக்காங்க. ஏற்கனவே பாம்பேவில் சோவியத் யூனியன் உதவியோட ஐஐடி வந்துவிட்ட நிலையில், இந்திய அரசு மெட்ராஸ் என்கிற ஆப்ஷனைச் சொல்லியிருக்கிறது. டெல்லி அருகே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பிய நிலையிலும், மெட்ராஸில் நிறுவலாம் என்கிற முடிவுக்கு மேற்கு ஜெர்மனி மறுப்பு சொல்லாமல் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. ஜெர்மனி, தங்கள் நாட்டுக்கு வெளியே சர்வதேச அளவில் கல்விக்கென மிகப்பெரிய ஸ்பான்சர் செய்த புராஜக்ட் ஐஐடி மெட்ராஸ் மட்டும்தான். எகிப்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு உதவியிருந்தாலும் இவ்வளவு பெரிய அளவுக்கு எந்தவொரு நாட்டுக்கும் அவர்கள் ஸ்பான்ஸர் செய்ததில்லை.
ஐஐடி மெட்ராஸைப் பத்தி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கிட்டே போகலாம். நேரம் கருதி வரலாறு, சில சுவாரஸ்யங்களை மட்டுமே இங்கே பதிவு பண்ணிருக்கோம். இதுதவிர ஐஐடி மெட்ராஸ் பத்தி `வாவ்’ தகவல்கள் உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அதை மறக்காம கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க மக்களே!