ஜெயபிரகாஷ்

ரோட்ல சிரிச்சுட்டு போறவங்களைப் பார்த்து அழுதுருக்கேன்- நடிகர் ஜெயபிரகாஷ் கதை!

கிராமத்து பெரியவர் கதாபாத்திரமானாலும் சரி, ரிச்சான அப்பாவா இருந்தாலும் சரி எந்த ரோலுக்கும் சரியா பொருந்திப்போகக்கூடியவர்தான் நடிகர் ஜெயபிரகாஷ். ஆரம்பக்காலக்கட்டத்துல பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்த ஒரு இளைஞன் தயாரிப்பாளராகி, சிறந்த குணச்சித்திர நடிகரா வலம் வந்துகிட்டிருக்கார். இவரோட ஸ்டோரியே ரொம்ப இன்ஸ்பையரிங்கா இருக்கும். அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

சொந்த ஊர் சீர்காழி. ஆரம்பத்துல மெடிக்கல் ஷாப்ல வேலை பார்த்தார். அதை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுபோக சென்னை வந்து பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தார். ஆனா மனசுக்குள்ள எப்படியாவது ஊர்ல இருக்கிறதையாவது வித்து ஒரு பெட்ரோல் பங்க் வாங்கிடணும்னு ஆசைப்பட்டார். அதனால கொஞ்சகாலம் கழிச்சு, பராமரிப்பு கம்மியா இருக்கிற ஒரு பெட்ரோல் பங்கை நண்பரோட சேர்ந்து விலைக்கு வாங்குகிறார். வேலைக்கு ஆள் இல்லாததால, இவரும், நண்பரும் சேர்ந்தே பார்த்துக்கிறாங்க. ஆரம்பத்துல யாரும் இவங்க பங்குக்கு பெட்ரோல் போட வரலை. ரோட்ல ஒரு கார் போனாக்கூட இவர் எந்திரிச்சு நின்னு நம்ம பங்குக்குள்ள வராதானு பார்ப்பார். அப்புறம் நாட்கள் மெதுவா நகர நகர மக்கள் தேடி வர ஆரம்பிச்சாங்க. வியாபாரமும் விரிவடைய ஆரம்பிச்சது. அடுத்த 10 வருஷத்துல  சென்னையில அடுத்தடுத்து இவங்களோட பெட்ரோல் பங்குகள் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துல ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பாளர் காஜாமைதீன் இவருக்கு நல்ல பழக்கமாக இருக்க, சினிமா தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி இறங்குறார், ஜெயபிரகாஷ்.

தயாரிப்பாளராக!

1995-ம் வருஷம் தெலுங்குல மிகப்பெரிய வெற்றி படமான நாகார்ஜுனா நடிச்ச ‘சிசின்றி’ படத்தை தமிழில்ல டப் பண்ணி சுட்டி குழந்தைனு படத்தை பெயர் வச்சு ரிலீஸ் பண்ணார். படங்கள் தயாரிப்புல கோபாலா கோபாலா, பொற்காலம், தவசி, ஏப்ரல் மாதத்தில்னு வெற்றிப்படுக்கட்டுகள்ல ஏறினவர், ஜூலி கணபதி, வர்ணஜாலம்னு கொஞ்சம் இறக்கங்களையும் சந்திச்சார். அதுக்கப்புறம் விஷால் அறிமுகமான செல்லமே, நெறஞ்ச மனசு படங்களை இவர்தான் தயாரிச்சார். தயாரிப்பாளரா அடிவாங்க ஆரம்பிச்ச நேரத்துல கைல இருந்து வந்த தொழிலும் கைவிட்டு போயிடுச்சு. பொருளாதார ரீதியா ரொம்ப அடிவாங்கின காலக்கட்டம் அதுனு கூட சொல்லலாம். சரத்குமாரை வச்சு ஒரு படம் தயாரிச்சு 80 சதவிகிதம் படம் முடிஞ்சு மீதி படத்தை முடிக்க பணம் இல்லாம கைவிட்டார், ஜெயபிரகாஷ்.

Also Read – ஆல் ஏரியா கில்லி.. கமலுக்கே போட்டி.. பிரசாந்த் செம சம்பவங்கள்!

புரொடியூசராக வாங்கிய அடி!

பெரிய பெரிய படங்களை தயாரிச்சும் சில படங்கள் பெரிசா கைகொடுக்காததால நஷ்டத்தை பார்த்த ஜெயபிரகாஷ் அதிலிருந்து மீண்டுவர ரொம்பவே கஷ்டப்பட்டார். இரவு விடிஞ்சு வெளிச்சத்தைப் பார்த்தாவே அவருக்கு பயம்ங்குற அளவுக்கு பணப்பிரச்னைகள் இருந்திருக்கு. தன்கிட்ட இருந்த கார்கள், பெட்ரோல் பங்குகள்னு எல்லாத்தையும் வித்து கடன் அடைக்கிற நிலை. இவர் பணத்துக்காக ஏறாத அலுவலகங்கள், பார்க்காத நண்பர்கள் இல்லை. ஆனால் பெரிசா எந்த உதவியும் கிடைக்கலை. அப்போதான் எதேச்சையா ஒரு விஷயத்தை கவனிச்சிருக்கார். ரோட்ல போறப்போ மக்கள் சந்தோசமா சிரிச்சுட்டு நடந்து போயிருக்காங்க. ஆனா, அதைப் பார்த்தவுக்கு அப்போதான் நாம சிரிச்சே ரொம்ப நாள் ஆச்சேனு யோசிச்சார். இப்படியே நாட்கள் ஓட ஆரம்பிச்சது. பழகின நண்பர்கள் பெரிசா எதுவும் கைகொடுக்க முன்வரலை. ஒரு கட்டத்துல விரக்தியின் உச்சத்துக்கே போனார், ஜெயப்பிரகாஷ். அப்போ இருந்த நண்பர்கள் இனிமே ஜெ.பி தலைதூக்க முடியாதுனு பேசிக்கிட்டாங்க. அதை தன்காதுபடவே கேட்டு அழாத குறையாக கடந்து போயிருக்கிறார் மனுஷன். இப்படி பல சோதனைகளை அனுபவிச்சார். இந்த காலக்கட்டத்துல இவருக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தது, அவரோட மனைவிதான்.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

நடிகராக அறிமுகம்!

தயாரிப்பாளரா பல சிக்கல்களை அனுபவிச்ச காலக்கட்டத்துலதான் இயக்குநர் சேரன் கூப்பிட்டு மாயக்கண்ணாடி படத்துல நடிக்க வச்சார். ஆரம்பத்துல தயங்கினவர் நடிச்சார். அதுக்கப்புறமா பிரேக் கொடுத்தது நாடோடிகளும், பசங்க படங்களும்தான். கிராமத்து வரைக்கும் போய்ச்சேர்ந்தார், ஜெயபிரகாஷ். பசங்க படத்துல குளத்துக் கரையில உட்கார்ந்து பேசுற மாதிரி ஒரு சீன் இருக்கும். 5 நிமிஷத்துக்கு ஒரு டயலாக் மட்டுமே ஜெயபிரகாஷ் பேசுவார். அதுல திறமையான நடிகருக்கான அத்தனை அம்சமும் இருக்கும். அவ்ளோ மோட்டிவேஷன் டயலாக் அது. அடுத்ததா கார்த்தி நடிச்ச நான் மகான் அல்ல இன்னும் ஒருபடி உச்சத்துக்கு கொண்டுபோனது. குணச்சித்திர நடிகராக வலம் வர ஆரம்பிச்சார்.  நடிக்கவே வராதுனு ஆரம்பத்துல தயங்கினவர், அதுக்கப்புறமா தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருதையும் வாங்கினார்.

தனித்துவம்!

உடல்மொழியும், பார்வையும்தான் ஜெயபிரகாஷின் தனித்துவம். வில்லனா வம்சத்திலும், யுத்தம் செய்லயும் மிரட்டினப்போ கண்ல வர்ற குரூரத்தையும், நான் மகான் அல்ல படத்துல எதார்த்தமான அப்பாவாக மாறி அன்பையும் கண்ல காட்டுவார். இந்த டிரான்ஸ்பர்மேஷன்தான் மக்கள்கிட்ட ஈஸியா கொண்டுபோய் சேர்த்திடுச்சுனு கூட சொல்லலாம். மங்காத்தாவில் த்ரிஷாவின் அப்பா, கழுகு வில்லன், எதிர்நீச்சல் கோச் என அடுத்தடுத்த படங்களில் நடிச்சவர், பண்ணையாரும் பத்மினியும் கிராமத்து பண்ணையாராகவே வாழ்ந்தார். அதன் பின்னர் டிக்..டிக்..டிக் வில்லனாக, ஜெய்பீம் டி.எஸ்.பி கேரெக்டர் என குணச்சித்திர நடிப்பை தொடர்கிறார். ஆனால் கம்பேரிசன் வைஸ் தமிழை விட தெங்கில் அதிகபடங்கள் நடித்து முடித்திருக்கிறார். இதுபோக 2.0 படத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக அக்‌ஷய்குமாருக்கு வாய்ஸ் கொடுத்திருந்தார்.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

ஸ்பெஷல்!

நடிகர் ஜெயப்பிரகாஷை பொறுத்தவரைக்கும் அவரது கேரக்டர்தான் அவரோட ஸ்பெஷல்னு சொல்லலாம். கிராமத்து மனிதராவும் நடிக்க முடியும், தாடியை வச்சு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி பணக்காரனாவும் நடிக்க முடியும். அதை சில படங்கள்ல சாதிச்சும் காட்டியிருக்கார். பண்ணையாரும் பத்மினியும் படத்துல டைட்டில் ரோல் பண்ணி பண்ணையாராவே வாழ்ந்து அசரவைச்சார். இனி அப்படி நடிப்புக்கு தீனி போடுற மாதிரி ஒரு கேரெக்டர் அவருக்கு கிடைக்குமான்னு கேட்டா சந்தேகம்தான். காருக்காக ஏக்கம், மனைவிகூட விளையாடுறது, கிராமத்து எகத்தாளமான பேச்சுனு பல வெரைட்டிகளை ஒரே படத்துல காட்டியிருந்தார், மனுஷன். அதேபோல இன்னொரு கிராமத்துப்படமான வம்சத்தில் காட்டியது குரூர முகம். கண்களில் விஷத்தை படர வைத்து பார்வையாளர்களுக்கு கடத்தியிருந்தார்.

எனக்கு இவர் படங்கள்ல பிடிச்சதும் பண்ணையாரும் பத்மினியும்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top