மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை அ.தி.மு.க மனதார வரவேற்பதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
![ஓ.பி.எஸ்](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/jayalalithaas-death-ops-offers-rs-10k-to-anyone-getting-reply-from-cm-palaniswami.gif)
கருணாநிதி நினைவிடம்
![மாதிரி நினைவிடம்](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/dfbds-1024x577.png)
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று பேரவையில் விதி என் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும். இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. கலைஞரின் வாழ்வில் சாதனைகள், சிந்தனைகளை இளைய தலைமுறையினர் அறியும் வகையில் நினைவிடத்தில் நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும். பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கலைஞர், நின்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்றவர். ஜனநாயகப் பாதையில் இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர். தோல்வி தொட்டதே இல்லை. வெற்றி கைவிட்டதும் இல்லை, அதுதான் கலைஞர். நாம் வாழும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு. கனவு மாநிலத்தையே உருவாக்கியவர் கலைஞர்’’ என்று பேசினார்.
அ.தி.மு.க வரவேற்பு!
அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,“50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல சிறப்பான சட்டங்களை இயற்றியவர் கலைஞர். இந்த அறிவிப்பை அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம். கலைஞரின் வசனத்தில் அனல்பறக்கும். பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது.
எனது தந்தை தீவிரமான கலைஞர் பக்தர். அவரது பெட்டியில் எப்போதும் பராசக்தி, மனோகரா படங்களின் கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்புவிப்பார். அவர் இல்லாத நேரத்தில் அதை நாங்கள் எடுத்துப் படித்திருக்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்’’என்றார்.
Also Read : பகீர் கிளப்பிய மதன்… பா.ஜ.க பொதுச்செயலாளர் பொறுப்பை உதறிய கே.டி.ராகவன் – என்ன நடந்தது?