ரஜினியின் கரியரை நன்கு கவனித்தீர்களென்றால் அவரது படங்களில் `அண்ணாமலை’ படத்துக்கு முன்பும் பின்பும் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரமுடியும். கே.பாலசந்தர் தயாரித்த ‘அண்ணாமலை’ படத்தின்போது தனது சிஷ்யர் ரஜினிக்கு மிக முக்கியமான அட்வைஸ் ஒன்றை வழங்கியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கே.பாலசந்தர் சொன்ன அந்த அட்வைஸை ஃபாலோ செய்யப்போய்தான் அதன்பிறகான ரஜினியின் கரியரே ஒரு அசுர வளர்ச்சியைத் தொட்டது எனலாம். என்ன அந்த முக்கியமான அட்வைஸ்?
வசந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘அண்ணாமலை’ என்பதும் கடைசி நேரத்தில்தான் சுரேஷ் கிருஷ்ணா உள்ளே வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன்விளைவாக ரஜினிக்கு சில தயக்கங்கள் தோன்றியிருக்கிறது. அதாவது சுரேஷ் கிருஷ்ணா கடைசி நேரத்தில் உள்ளே வந்திருப்பதால் அவரால் இந்தப் படத்தின் திரைக்கதையை சரியாக அமைத்து கொண்டுபோய்விட முடியுமா எனத் தோன்றியிருக்கிறது ரஜினிக்கு.
![கே.பாலச்சந்தர் - ரஜினி](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/Rajini-Balachander.jpg)
தனது தயக்கத்தை கே.பாலசந்தரிடம் ரஜினி வெளிப்படுத்த அதற்கு அவர், ‘இந்தப் படத்தோட டிஸ்கஷன்ல நீயும் கலந்துக்க.. எல்லாத்தையும் கூட இருந்து வாட்ச் பண்ணு. இன்னும் நீ… கேட்குற கதையில எது நல்லாயிருக்கோ அதுல நடிச்சுட்டு போற ஆர்டிஸ்ட் இல்ல. உனக்கான கதையை நீயே டைரக்டர்ஸ் கூடவே இருந்து வளர்த்து எடு. இந்தப் படம்னு இல்ல. இனிமே நீ பண்ணப்போற எல்லா படத்துலயே இதை பண்ணு. இதனால உன் படங்கள் கொஞ்சம் லேட்டா வந்தாலும் பரவாயில்லை’ என்றிருக்கிறார். கே.பி சொன்ன இந்த அட்வைஸை கெட்டியாக பிடித்துக்கொண்ட ரஜினி, ‘அண்ணாமலை’ திரைக்கதையாக்கத்தில் முழுக்க கூடவே இருந்து தனக்கு தேவையான மாஸ் அம்சங்களை சேர்த்திருக்கிறார்.
அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அந்த ரூட்டிலேயே பயணிக்க ஆரம்பித்தார் ரஜினி. தன்னுடன் இணக்கமாக பயணிக்கக்கூடிய குறிப்பிட்ட சில இயக்குநர்களுடனே மாறி மாறி அவர்களைக் கொண்டே தான் விருப்பப்படுவதுபோல கேரக்டர்களையும் களத்தையும்கொண்ட கதைகளை உருவாக்கி நடிக்க ஆரம்பித்தார் ரஜினி. இப்படித்தான் ‘பாட்ஷா’, ‘முத்து’ ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ என பல வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்தார் ரஜினி. எந்த அளவுக்கு இதில் ரஜினி ஆர்வமாகிப்போனார் என்றால் அவர் வழக்கமாக நடித்து பார்க்கும் ஆளுயர கண்ணாடியை ‘படையப்பா’ டிஸ்கஷன் நடக்கும் ஹோட்டலுக்கே கொண்டுச் சென்று அங்கேயே `படையப்பா’ கெட்டப்களில் கண்ணாடி முன் நடித்து பார்த்து, அந்த கெட்டப்புக்கேற்ற காட்சிகளை சுடசுட திரைக்கதையில் வரும்படி பார்த்துக்கொண்டாராம் ரஜினி.
![`படையப்பா’ ரஜினி](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/Rajini-Padaiyappa.jpg)
ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா, ரஜினியின் இந்த உத்தி, ‘பாபா’ படத்தில் ஓவர் டோஸ் ஆகிப்போனது. விளைவு ‘பாபா’ பெரும் தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து ரஜினி, அடுத்து நடித்த ‘சந்திரமுகி’ படத்திலிருந்து ‘லிங்கா’வரை டிஸ்கஷன்களில் கலந்துகொண்டாலும் பெரிய அளவில் தலையிடமல் தன்னுடைய இமேஜிலிருந்து திரைக்கதை ரொம்ப விலகிபோனால் மட்டுமே கருத்து சொல்லியிருக்கிறார். ‘லிங்கா’ படத் தோல்விக்குப் பிறகு ரஜினி அதிலும் பங்கேற்காமல் இயக்குநர்கள் சொன்ன கதை பிடித்திருக்கிறதா இல்லையா, பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டால் மறுப்பேச்சே இல்லாமல் நடித்துக்கொடுத்துவிடுவது என்பதுதான் தற்போது அவர் கடைபிடித்து வரும் நடைமுறை.
Also Read – தக்க சமயத்தில் குருவுக்காக பாக்யராஜ் செய்த கைமாறு… `ஒரு கைதியின் டைரி’