* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, வரிசையாக பல்வேறு தலைவர்களை சந்தித்து வந்தார் சசிகலா. அதே பாணியை மீண்டும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார். `சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் அ.தி.மு.கவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு மார்ச் 15 அன்று வரவுள்ளது. அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக எதுவும் வராவிட்டால், அ.தி.மு.கவை மீட்டும் வகையில் அ.ம.மு.கவை ஆதரிப்பார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை’ என்கின்றனர் அவரது தரப்பினர்.
* சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை முடித்துவிட்டு கடந்த ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலையானார். ஆனால், கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மேலும் சில நாள்கள் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். கடந்த பிப்ரவரி 8ம் தேதி சாலைமார்க்கமாக சென்னைக்கு வந்தார். இதன்பிறகு 16 நாள்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தவர், ஜெயலலிதா பிறந்தநாளில் அதிரடி காட்டத் தொடங்கினார்.
* ஜெயலலிதா பிறந்தநாளன்று சசிகலா பேசுகையில், `நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்’ என அ.தி.மு.க தொண்டர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் தனது பேச்சில் தினகரனின் அ.ம.மு.க குறித்து எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, சரத்குமார், ராதிகா உள்பட பலரும் சசிகலாவை சந்தித்துப் பேசினர்.
* இந்த சந்திப்பும் அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய சரத்குமார், ‘சசிகலாவின் உடல் நலனை விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள அவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கும் போதெல்லாம் சசிகலா உடன் இருந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற எண்ணத்தின் அடிப்படையில், நாங்கள் பயணித்த காலங்களை நினைவுகூறி சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்தோம். மீண்டும் அவர் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தேன். நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல இருந்திருக்கிறோம்’ என்றார். இதையடுத்து பாரதிராஜாவும்,` சாதனை தமிழச்சியைப் பார்ப்பதற்காக வந்தேன்’ என்றேன்.
* அதேநேரம் சசிகலாவை சீமான் சந்தித்தது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியது. சசிகலாவுடனான சந்திப்பின்போது பேசிய சீமான், ` நானும் பல ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன். சிறையின் வலி எனக்குத் தெரியும்’ என்றவர், `உங்களுக்கு இவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தியது பா.ஜ.க அரசுதான். அவர்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கத் தயங்காதீர்கள். அதுவே உங்கள் தலைமைக்கு வலிமையைத் தரும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க உங்கள் பக்கம் வரும்’ என உறுதி கொடுத்திருக்கிறார். இதனை சசிகலா ஆமோதித்தார். தொடர்ந்து திரையுலகப் பிரமுகர்கள் பலரும் சசிகலாவை சந்தித்துப் பேசினர்.
* இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதை அறிந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட்டாக அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும், `துரோகிகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த இயக்கத்துக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை அறத்தின் வழி நின்று அழித்தும் ஒழித்தும் அம்மா நம்மைக் காத்து வருகிறார் என்பது நமது நம்பிக்கை. எனவே, நீங்கள் அனைவரும் அம்மாவின் பிறந்தநாளன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றிவைத்து அம்மாவின் புனித ஆன்மாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள்’ என்றனர். அதற்கேற்ப, எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தீபம் ஏற்றினார்.
`கொரோனா காலத்தில் நமது ஒற்றுமையை வெளிக்காட்ட தீபம், டார்ச் லைட் ஏற்றி வையுங்கள்’ என பிரதமர் கூறிய அதே பாணியில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் தங்களது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியது இணையத்தளங்களில் வைரலானது.
[zombify_post]