பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் திரையுலகத்தில் தனது 52 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 1969-ம் ஆண்டில் அவரது முதல் படமான `சாத் இந்துஸ்தானி’ வெளியானது. சாத் ஹிந்துஸ்தானியில் தொடங்கிய அவரது திரையுலகப் பயணம் மொஹபதீன், பாக்பன், பா, சர்க்கார் வழியாக குலாபோ சீதாபோ வரை நீண்டுகொண்டே செல்கிறது. பாலிவுட்டில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பீக்கில் இருக்கும் நடிகரான அமிதாப், தனது 52 வருட சினிமா பயணம் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதமாக முக்கிய கதாபாத்திரங்களின் கொலாஜ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டின் கேப்ஷனில், “51 ஆண்டுகள்..!!! இவையெல்லாம் எப்படி நடந்தது என இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமிதாப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…
- மிருனாள் சென் இயக்கத்தில் 1969-ம் ஆண்டு வெளியான `புவன் ஷோம்’ திரைப்படத்தில் வாய்ஸ் நேரேட்டராக தனது திரையுலக வாழ்க்கையை அமிதாப் பச்சன் தொடங்கினார். சத்யஜித் ரேவும் 1977-ம் ஆண்டு வெளியானசத்ரஞ் கே கிலாடி’ என்ற திரைப்படத்தில் அமிதாப்பின் வாய்ஸைப் பயன்படுத்தியுள்ளார்.
- அமிதாப், ரேடியோவில் தொகுப்பாளராக வேண்டும் என முதலில் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரை டெல்லி அகில இந்திய வானொலி நிலையம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிப்பது தொடர்பாக தனது முயற்சியில் இறங்கியுள்ளார்.
- திரைப்படங்களுக்கான ஆடிஷன்களில் அமிதாப் முதன்முதலில் கலந்துகொள்ளும் போது உயரம் அதிகமாக இருப்பதால் நிராகரிக்கப்பட்டார்.
- அமிதாப், தனது முதல் வெற்றிப்படமான `சஞ்சீர்’ வழங்குவதற்கு முன்பு 1969 முதல் 1973 வரை சுமார் 12 தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார்.
- மற்ற நடிகர்களைவிட அமிதாப், அதிகமான படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். `மகான்’ என்ற திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
- 1983-ம் ஆண்டு வெளியான கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட செட் விபத்தின் அமிதாப் படுகாயம் அடைந்தார். அவரது குடும்பத்தினரும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் அவர் மீண்டு வருவார் என்பதில் நம்பிக்கை இழந்தனர். ஆனால், அவர்களது நம்பிக்கைகளைக் கடந்து மீண்டு வந்தார்.
- அமிதாப் 90-களில் தன்னுடைய திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய சரிவைக் கண்டார். அவர் இயக்குநர் யஷ் சோப்ராவிடம் வேலை கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். பின்னர் அவருக்கு `மொஹபதீன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
- வலது மற்றும் இடது கை என இரண்டு கைகளாலும் எழுதும் பழக்கம் உடையவர்.
- 1995-ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இருந்தார்.
- பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் அமிதாப் பச்சன், சார்லி சாப்ளின் மற்றும் மார்லன் பிரான்டோ உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களை வீழ்த்தி `ஆக்டர் ஆஃப் தி மில்லினியம்’ பட்டத்தை வென்றார்.
- அமிதாப் பச்சன் முதன் முதலில் பெற்ற சம்பளம் ரூபாய் 300.
- அமிதாப் பச்சன் பல்வேறு வகையான வாட்ச்களை சேகரிப்பதில் ஆர்வம் உடையவர்.
- லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு இடங்களும் அமிதாப் பச்சனின் ஃபேவரைட் சுற்றுலா ஸ்பாட்டுகள்.
Also Read : தமிழ் சினிமால நீங்க எந்த வில்லனோட மேட்ச் ஆகுறீங்கனு பார்க்கலாமா?