சீரியல் மூலம் அறிமுகமாகி இன்று பாலிவுட்டின் முக்கியமான ஹீரோயினாக உயர்ந்திருக்கும் சீதா மகாலட்சுமி மிருணாள் தாகூர் அவ்வளவு எளிதாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. ஆரம்பத்தில், ரொம்பவே எக்ஸ்ஃபோஸ்டு ஆன முகம் உங்களுடையது. அதனால், உங்களுக்கு பாலிவுட்டில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்பவர்களுக்கு நன்றி சொல்லும் பாசிடிவிட்டி பொண்ணு நம்ம மிருணாள் தாகூர். யார் இந்த மிருணாள் தாகூர்… சீரியல் டு பாலிவுட் அவங்களோட பயணம் எப்படி சாத்தியமாச்சுனு அவங்களப் பத்தின சுவாரஸ்யமான தகவல்களைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
பாரம்பரியமான மராத்தி குடும்பத்தில் 1992 ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தவங்க மிருணாள். அப்பா உதய்சிங் பி.தாகூர் மத்திய அரசு வங்கிப் பணியில் இருந்தவர். இதனாலேயே, தந்தையின் டிரான்ஸ்ஃபரால் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்க வேண்டிய நிலைமை. ஒரு இடத்தில் ஸ்கூல் சேர்ந்து நண்பர்கள் வட்டம்னு கொஞ்சம் பயணிக்க ஆரம்பிக்குறப்ப, உடனே அப்பாவோட டிரான்ஸ்ஃபரால வேற ஒரு இடத்துக்குப் போக வேண்டி வந்துடுமாம். இது ஆரம்பத்துல அவங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தாலும், ஒருவழியா பின்னாட்களில் சமாளிச்சிருக்காங்க. மும்பையின் பிரபலமான வசந்த் விஹார் ஸ்கூல்ல படிப்பை முடிச்சுட்டு கே.சி.காலேஜ்ல சேர்ந்திருக்காங்க… ஆனா, அப்போ ஸ்டார் பிளஸ் சேனல்ல Mujhse Kuchh Kehti…Yeh Khamoshiyaan-ங்குற சீரியல்ல நடிக்குற வாய்ப்பு வரவே, படிப்பை பாதியிலேயே முடிக்க வேண்டியதாப் போச்சாம்.

டிவியில் பிரபலமான நடிகரான மோஹித் சேகல் ஜோடியா இவங்க நடிச்ச Mujhse Kuchh Kehti…Yeh Khamoshiyaan சீரியல் 2012-2013 காலகட்டங்கள்ல ஒளிபரப்பாகி இவங்களுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. டிவி செலிபிரட்டியா அவங்க நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்துச்சு. அதுக்கடுத்து அர்ஜூன் சீரியலோட Har Yug Mein Aayega Ek – Arjun பகுதில ஜர்னலிஸ்ட் தேவிகா ஆனந்தா இவங்க நடிச்சது இன்னும் பாப்புலாரிட்டியைக் கொடுத்தது. அதையெல்லாம் விட இவங்க கரியர்ல முக்கியமான சீரியல்னா ஜீ டிவில 2014 முதல்ல ஒளிபரப்பான கும்கும் பாக்யா. அந்த சீரியல்ல தனது அக்கா, அம்மாவோட சேர்ந்து ஒரு கல்யாண மண்டபத்தை நிர்வகிக்கும் புல்புல் அரோரா கண்ணாங்குற கேரக்டர்ல இவங்க நடிச்சாங்க. மிருணாள் தாகூரின் நடிப்பும் சரி, அவங்களோட க்யூட்னஸும் சரி சீரியலை பெரிய ஹிட்டடிக்க வைச்சது.
இந்தியாவில் மட்டுமில்லீங்க இந்தோனேசியாவிலும் நம்ம மிருணாள் பாப்புலரான டிவி செலிபிரட்டி. இந்தியாவில் பல மொழிகள்ல ஹிட்டடிச்ச ஒரு சீரியலை இந்தோனேசியாவைச் சேர்ந்த டிவி சேனல் தயாரிச்சப்ப, அதுல முக்கியமான கேரக்டர்ல இவங்க நடிச்சிருந்தாங்க. அது இந்தோனேசியாவிலும் மிருணாள் தாகூருக்கு ஃபேன் பேஸை கொண்டுவந்துச்சு. அது என்ன சீரியல்… அதுல இவங்க கேரக்டர் என்னனு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
டிவி சீரியல் நல்லா போய்ட்டு இருந்தப்ப, நம்ம தாய்மொழியான மராத்தி படங்கள்லயும் நடிக்கலாமேனு குடும்ப உறுப்பினர்கள் சொல்லியிருக்காங்க. அப்படி இவங்க நடிச்சு 2014-ல வெளியான Vitti Dandu படம்தான், பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் தயாரிச்ச முதல் மராத்திப் படம். அதுக்கப்புறம், Surajya படத்துல நடிச்சாங்க. இவங்க கரியர்ல திருப்புமுனை ஏற்படுத்திய படம்னா, அது 2018ல வெளியான லவ் சோனியாங்குற இண்டர்நேஷனல் படம்தான். 2012ல இருந்தே படத்துக்காக வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க. ஹ்யூமன் டிராஃபிக்கிங் பத்தி பேசுன இந்தப் படத்துக்காக கொல்கத்தாவுல பிராத்தல் ஹவுஸ் இருக்க ஏரியாவுல தங்கியிருந்து அங்கிருந்த மக்களோட நடை, உடை, பாவனைகள் பத்தி ரிசர்ச் பண்ணாங்களாம் மிருணாள்.

ஆரம்பத்தில் பாலிவுட் வாய்ப்புகள் கேட்டு எக்கச்சக்கமான ஆடிஷன்களுக்குப் போயிருக்காங்க. இவங்களைப் பார்த்தவங்கள்லாம், உங்களோட ஃபேஸ் ரொம்ப exposed ஆ இருக்கு. பிரபலங்களின் மகள்கள், மருமகள்கள்னு ஆதிக்கம் செலுத்திட்டு இருக்க இந்த சூழல்ல உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதே குதிரைக் கொம்புதான்னு பலரும் சொல்லியிருக்காங்க. பல ஆடிஷன்களுக்கு இவங்க போனப்போ, இவங்களைப் பார்த்தவுடனேயே திரும்ப அனுப்பிடுவாங்களாம். ஆனால், அதையெல்லாம் பாசிட்டிவா எடுத்துட்டு இந்த ஸ்டீரியோடைப்பை நிச்சயமா உடைக்கணும்னு தொடர்ந்து முயற்சிகள் பண்ணிருக்காங்க. இவங்களுக்கு பிரேக் கொடுத்த முதல் படமே பெரிய படம். 2019ல வெளியான சூப்பர் 30. ஹிரித்திக் ரோஷன் ஹீரோவா நடிச்சிருந்த அந்தப் படம் ஏழை மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபட்ட விகாஷ் பல்லோட வாழ்க்கையைப் பத்துனது. அந்தப் படத்தோட வெற்றிக்குப் பிறகு, பட்லா ஹவுஸ், நெட்ஃபிளிக்ஸ் ஆந்தாலஜியான கோஸ்ட் ஸ்டோரீஸ்னு வரிசையா பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுச்சு. அதன்பிறகு டூஃபான், ஜெர்ஸினு இவங்க பாலிவுட்டோட செலிபிரேட்டட் ஹீரோயின் அந்தஸ்துக்குப் போனாங்க. சமீபத்தில் வெளியான சீதா ராமம் படம் இவங்களை இந்தியா முழுவதும் பெரிய ஹீரோயினா கொண்டு நிறுத்தியிருக்கு.

ஆரம்பத்தில் தனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்லி நிராகரித்தவர்களுக்கு நன்றி சொல்லும் மிருணாள், அவர்களால்தான் என்னால் இப்படி ஒரு இடத்துக்கு வர முடிஞ்சதுனு பாசிட்டிவிட்டி பரப்பிட்டு இருக்காங்க. நம்ம சீதா மகாலட்சுமி பயங்கரமான Foodie. அப்புறம் இவங்களுக்கு ரொம்பப் பிடிச்சது டிராவலிங்கும் போட்டோகிராஃபியும். எந்தவொரு ஊருக்குப் போனாலுமே அங்க ஒரு ஆல்பமே போடுற அளவுக்கு போட்டோஸ் எடுத்து தள்ளிடுவாங்களாம். அப்படி, சொந்தமாகவே ஒரு DSLR கேமரா வாங்கணும்னு கொரோனா லாக்டவுன் டைம்ல ஆசைப்பட்டிருக்காங்க. ஆனால், அதுல கொஞ்சமாவது அனுபவம் வேணும்னு சொல்லி, தன்னோட ஆசையைக் கொஞ்சமா தள்ளிப் போட்டிருக்காங்க. உணவு வகைகள்ல இவங்களோட ஃபேவரைட்டான உணவுகள்னு பார்த்தா இறால், மீன் வகைகள், அப்புறம் ஜிலேபினா ரொம்பவே பிடித்தமானதாம்.
Also Read – நிஜ ரௌடி கத்தமாட்டான்… துல்கர் ஏன் பான் இந்தியா ஸ்டார்?
நாகினிங்குற பேர்ல பாம்பு பழிவாங்கும் கதை இந்தியாவுல பல மொழிகள்ல அடிச்சு துவைக்கப்பட்ட சீரியல். Nadin என்கிற பெயரில் இந்தோனேசியா டிவியில் ஒளிபரபான அந்த சீரியல்ல தாராங்குற கேரக்டர்ல நடிச்ச மிருணாள் தாகூருக்கு அங்க ஃபேன்ஸ் ஆர்மியே இருக்காம். அவங்க கடைசியா நடிச்ச டிவி சீரியலும் இதுதான்.
சீதா ராமம் படத்துல இளவரசி நூர்ஜஹான் எனும் சீதா மகாலட்சுமி கேரக்டருக்குக் கிடைத்த வரவேற்பு இவங்களே எதிர்பார்க்கதாதாம். தென்னிந்திய மக்கள் தனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும் அன்பையும் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார் மிருணாள் தாகூர். சீதா மகாலட்சுமி கேரக்டர் உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடிச்சிருந்ததுங்குறதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!