வேலூரில் உடைந்த கண்ணாடித் துகள்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் போலீஸில் ஒப்படைத்தார்.
தி.மு.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராவார். இன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக காரில் வேலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னே உடைந்த கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது.
![வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/kathir-anand.jpg)
பாதுகாப்பு எதுவுமின்றி திறந்த லாரியில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடித் துகள்கள் சிதறி சாலையில் விழுவதைப் பார்த்திருக்கிறார். உடனே, லாரியை முந்திச் சென்று மடக்கி நிறுத்தியிருக்கிறார். அதன்பின்னர், லாரி ஓட்டுநரிடம் இப்படி பாதுகாப்பில்லாமல் கண்ணாடித் துகள்களைக் கொண்டு செல்லலாமா… இது மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு ஆபத்தை விளைவித்துவிடும் என்று கூறி எச்சரித்திருக்கிறார்.
![கண்ணாடித் துகள்களை ஏற்றிவந்த லாரி](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/Kathir-anand-3.jpg)
அத்துடன் வேலூர் நகர காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த அவர், போலீஸார் வரும் வரை அந்த இடத்தில் காத்திருந்தார். போலீஸார் வந்தவுடன் லாரியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்பியிருக்கிறார். இதுகுறித்த வீடியோ, போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Also Read – `யார் முதலில் தாலி கட்டுவது…’ குன்றத்தூர் கோயிலில் அடித்துக்கொண்ட திருமண கோஷ்டியினர்!