`சைத்தான் சைக்கிள்ல வர்றான்…’ சிக்னலில் சிக்கிய சிக்கலான காமெடி கதைகள்

சென்னையில் சமீப காலத்துல டிராஃபிக் சிக்னல்-களில் வைக்கப்பட்டிருக்கும் கேமிராவால் சிக்கியவர்களின் கதைகள் பற்றி பலரும் சொல்வதைக் கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பும் வந்துவிடுகிறது. கோயம்பேட்டுல இருந்துகிட்டு கோயம்புத்தூர்ல இருக்கேன் புருடா விட்டவர் என்ன ஆனார் தெரியுமா?

Traffic Signal
Traffic Signal

சென்னையில் பணிபுரியும் ஓர் இளைஞர் வீட்டுக்குத் தெரியாமல் காதலித்த விஷயம் அவர் வீட்டினருக்கு தெரிந்திருக்கிறது. அந்தத் தகவல் அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் ஹைலைட். அந்த காமெடியான விஷயத்தைப் பார்ப்போம். ஓர் இளைஞன் ஓர் இளைஞியைக் காதலிப்பது சகஜம் தானே, இதுக்கு ஒரு வீடியோ போடுவீங்களாடான்னு கேக்குறீங்களா..? அது சகஜம் தாங்க… ஆனா, இந்த விஷயத்துல இருந்து நாம ஃபாலோ பண்ண வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. அதைப்பத்திதான் இந்த வீடியோல பாக்கப்போறோம்.

‘டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்’யான்னு சொன்னாலும், இந்த டெக்னாலஜிகள் வந்த பிறகு பலரும் சுலபமா மாட்டிக்குறாங்க. சிசிடிவிக்கள் வந்த பிறகு கொலைக்குற்றவாளிகளைக் கூட எளிதா அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. அவ்வளவு பெரிய குற்றங்களை விடுங்க. நம்மாட்கள் சின்ன சின்ன விஷயங்களில் கூட மாட்டிக்குறாங்க. கோயம்பேட்டுல இருந்துகிட்டு கோயம்புத்தூர்ல இருக்கேன் புருடா விடுறவங்களாம் சுலபமா மாட்டிக்குறாங்களாம். சென்னையில் சமீப காலத்துல டிராஃபிக் சிக்னல்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமிராவால் சிக்கியவர்களின் கதைகள் பற்றி பலரும் சொல்வதைக் கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பும் வந்துடுது.

Traffic Signal
Traffic Signal

நம்ம பிரெண்டு ஒருத்தர் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு விசேஷத்துக்காக சில பொருட்களை வாங்கிட்டு அவர் அப்பாவோட கார்ல போறதா பிளான். அவருடைய குடும்பத்தாரும் விசேஷ தேதி அன்று நாமக்கல்லில் இருந்து கோயம்புத்தூருக்கு வருவதாக ஏற்பாடு. நம்ம ஃபிரெண்டு விசேஷத்துக்கு இரண்டு நாள் முன்னாடி போய் ஏற்பாடுகளைக் கவணிக்கனும்னு சொல்லி இருக்காங்க. அவரும் அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செய்துட்டாரு. கிளம்புற சமயத்தில், அவருடைய இன்னொரு நண்பரைப் பார்த்திருக்கார். கோயம்புத்தூர்ல விசேஷத்தை சிறப்பிக்குறதுக்கு முன்னாடி, சென்னையில் சின்னதா ஒரு பார்ட்டி கொண்டாடுவோம்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்காங்க. சின்ன பார்ட்டி பெரிய பார்ட்டியாக அன்னைக்கு சாய்ந்திரம் கிளம்ப வேண்டியவர் சுயநினைவுக்கு வந்த போது மறுநாள் காலையாகி இருக்கிறது. அவசர அவசரமா காலை 8 மணிக்கு கிளம்பி இருக்கார். அவர் கிளம்பின கொஞ்ச நேரத்துல, அவர் அப்பா போன் பண்ணி, “எங்கப்பா இருக்க… கோயம்புத்தூர் போய்ட்டியா?”ன்னு கேட்டிருக்காரு. நம்ம ஃபிரெண்டும் சமாளிப்போம்னு இன்னும் ஒரு மணி நேரத்துல கோயம்புத்தூர் போயிருவேன்பா, போய்கிட்டே இருக்கேன்னு சொல்லியிருக்கார்.

கோயம்பேட்டில இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு மணி நேரத்துல எப்படிப்பா வருவ? கோயம்பேட்டுல இருந்து ஏர்போர்ட் போகவே அரை மணி நேரம் ஆகும், அதுக்கப்புறம் நீ பிளைட் புடிச்சு கோயம்புத்தூர் போகவும் அரை மணி நேரம் ஆகுமேப்பா, எப்படி ஒரு மணி நேரத்துல வருவன்னு கேட்டிருக்கார். நம்ம பிரெண்டு அப்போ திரும்பி ரோடைப் பார்த்தா கோயம்பேடு ரோகினி தியேட்டர் வாசல்ல விக்ரம் பட போஸ்டர்ல கமல் சிரிச்சுகிட்டிருந்திருக்காரு.

அவசர அவசரமா கிளம்பினதுல அண்ணா நகர் சிக்னல்ல ட்ராஃபிக் வயலேட் பண்ணி இருக்கார் நம்ம ஃபிரண்டு. அங்க இருந்த சிசி டிவி கேமரா தன் கடைமையச் செய்திருக்கு. விதிமீறல்களுக்கு அபராதம் கட்டச் சொல்லி ஓலை அவர் அப்பாவுக்கு எஸ்.எம்.எஸ்ஸா போயிருக்கு. கோயம்புத்தூர் விழாவுக்கு முன்னாடி சென்னையில விழாவைச் சிறப்பிச்ச நம்ம ஃபிரெண்டுக்கு அவங்க அப்பா இன்னொரு விழாவை போன்லயே வச்சிருக்காரு.

Also Read – கண்ணீர் வரவைக்கும் யானை மரண சம்பவங்கள்!

இந்த சம்பவம், கொஞ்ச நாளைக்கு முன்னாடி ட்விட்டர்ல சுத்திகிட்டிருந்தது. ஊர்ப்பக்கத்துல இருந்து ஓர் இளைஞர் சென்னையில் வேலை கிடைச்சு வந்திருக்கார். அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்னு பிச்சுமணி கணக்கா கெளம்பி வந்தவர் வாழ்க்கையில் சிக்னல் கேமரா மணியடிச்சு ஓரமா உட்கார வச்ச கதையைப் பாப்போம்.

சென்னை வந்த சில மாசங்கள்லயே அவருக்கு ஒரு காதலும் அமைஞ்சிருக்கு. சென்னை, வேலை, காதலி, வீக் எண்டுன்னு நம்ம தம்பி ஜாலியா சுத்தியிருக்காரு.

அவரோட அண்ணன் கிட்ட இருந்து வாட்ஸ்அப்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. “யார்றா அந்த பொண்ணு?”

நம்ம தம்பி சமாளிச்சிருக்காரு, புரியலையேண்ணே, எந்தப் பொண்ணுனு கேட்க…

மஞ்ச கலர் சுடிதார் போட்ட பொண்ணுடான்னு அவங்க அண்ணன் அழுத்தி சொல்ல, திரும்பவும் தம்பி சமாளிச்சிருக்கார்.

இதுக்கு மேல வேலைக்காகதுன்னு அவர் அண்ணன் ஒரு போட்டோவை அனுப்பி இருக்கார். பைக்ல நம்ம தம்பி பின்னாடி ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்க போட்டோ அது. லாங் ஷாட்ல தம்பி பின்னாடி ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கு சிக்னல்ல கோட்டுக்கு வெளிய பைக் நிண்ணுகிட்டிருக்க ஒரு போட்டோனு இரண்டையும் அணுப்பி கேட்டிருக்கார்.

தம்பி அதோட சரண்டர்.

சென்னைக்கு வேலைக்கு வரும்போது ஊர்ல இருந்து அண்ணனோட பைக்கை எடுத்துகிட்டு தம்பி வந்திருக்கார். சிக்னல் கோட்டைத் தாண்டி நிண்ணதுக்கு அபராத ஓலை அண்ணனுக்கு எஸ்.எம்.எஸ்ல போய் இருக்கு.

மேல சொன்னதெல்லாம் சில சம்பவங்கள் தான். இப்படி எக்கச்சக்கமா சென்னையில் நடந்துகிட்டிருக்கு, நானே ஒருமுறை ஃபைன் கட்டியிருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

Traffic Signal
Traffic Signal

சென்னை கதைகள் இப்படி இருக்க, மும்பைல இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. MH 11 AF XXXX அப்படிங்குற எண் கொண்ட ஒரு காருக்கு ஒரு நாள் சிக்னல்ல நிக்காம போய் இருக்கீங்கன்னு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு. அவரும் டைம் இருக்கே பைன் கட்டன்னு அந்த சலானை திறக்கவே இல்லை. ஆனா, அடுத்தடுத்த நாள்கள் திரும்ப திரும்ப ஒரே சிக்னல்ல விதிமீறல்ல ஈடுபட்டதா புது புது சலான் வந்திருக்கு, திறந்து பார்த்தவருக்கு ஒரே ஷாக். அதுல இருந்தது அவர் வண்டி இல்லை, அடுத்த அதிர்ச்சி அது ஒரு பைக், இவரோடது கார். எப்படின்னு பார்த்தா MH 11 AE XXXX அப்படின்ற எண் கொண்ட ஆக்டிவா பைக்காரர், AE-யை AF-ஆ மாற்றி தகிடுதத்தம் பண்ணி தினமும் பைன்ல இருந்து தப்பிக்கப் பாத்திருக்கார். இவ்ளோ யோசிச்ச தம்பி ஒழுங்கா சிக்னலை வயலேட் பண்ணாம இருந்திருக்கலாம.

சென்னையில் பல இடங்களில் முக்கியமாக அண்ணா நகர் பகுதிகளில் பல சிக்னல்களில் கேமராக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. சாலை விதிகளை மதிக்காமல் வண்டி ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கும் அவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறையும் இதன் மூலம் எளிதாகி இருக்கிறது. இந்தியாவிலேயே சென்னையில் தான் இத்தகைய சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை அதிகம்.

Also Read – அடிவாங்குறதுக்குனே பா.ஜ.க-ல இருக்கவங்க இவங்கதான்!

சிக்னல்களில் கோட்டைத் தாண்டி நிற்பது, ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகணத்தில் பயனிப்பது, மூன்று நபர்கள் பயணிப்பது, நம்பர் பிளேட் சரியாக பயன்படுத்தாது, சிக்னல்களை அதிவேகமாக கடப்பது, விதிமீறல்களில் ஈடுபடுவது என அத்தனை விதமான விதிமீறல்களையும் சிக்னல்களில் அமைக்கப்பட்டிருக்கும் அதிவிரைவு கேமராக்கள் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட், மேற்கொண்ட விதிமீறல், வாகனத்தின் முழு படம் என அத்தனையையும் சில நொடிகளில் படம் பிடித்துவிடும். அடுத்த சில நிமிடங்களில் வாகனம் பதிவு செய்யப்பட்டவரின் தொலைபேசி எண்ணிற்கு ‘விதிமீறல் மற்றும் அபராத’த்துடன் கூடிய எஸ்.எம்.எஸ் சென்று விடும். குறிப்பிட்ட தேதிக்குள் அந்த அபராதத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தி விட வேண்டும்.

இந்தக் கதைகள் கேட்க காமெடியா இருந்தாலும் சிக்னலையும், சாலை விதிமுறைகளையும் நாம கட்டாயம் கடை பிடிச்சாகனும் அப்படிங்குறதை நமக்கு உணர்த்துது. போலீஸ் இல்லாதப்போ போய்க்கலாம், யாருமே இல்லை போய்க்கலாம்னுலாம் யோசிக்காதீங்க. ஏன்னா ‘டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்’யா.

இந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு இருக்கா, இருந்தா அதை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top